Friday, March 26, 2021

பெருநெல்லி மரம் | Indian goose berry

 


பெருநெல்லி  Indian goose berry

        Phyllanthus emblica

வேறு எந்த ஒரு கனியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின்சிஉடையது நெல்லிக்கனி. இந்தியா முழுவதும், பாலைப் பகுதியைத் தவிர இதர இடங்களில் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இதன் அருமையான கனிகளுக்காகத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

நெல்லி மரம் 8-12 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் 45 செ.மீ அளவிற்குப் பருத்து சிறிது உயரத்தில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, ஓரளவிற்கு அடர்ந்து காணப்படும். பட்டை கருமைச் சாம்பல் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்.இவை வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.

புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். தமிழகத்தில் நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. பிப்ரவரியில் ஒரு முறையும் ஜூலையில் மற்றொரு தடவையும் பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அதிக அளவு காய்கள் உருவாவதில்லை. ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் கிடைக்கின்றன.

நெல்லியின் தழைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துகின்றனர்.

 தழையில் 25% டானின் உள்ளது. தழையிலிருந்து சாயப்பொருட்கள் எடுக்கலாம். முன்னர் டஸ்ஸார் பட்டிற்குச் சாயமேற்ற இதனை உபயோகித்துள்ளனர்.

 மரப்பட்டையில் 8-9% அளவில் டானின் உள்ளது. சிறு கிளைகளில் உள்ள பட்டையில் 21% அளவில் டானின் உள்ளது. இதைப் பயன்படுத்தி தோலைத் திறம்பட பதனிடலாம். மற்றும் தோலிற்குச் சிவப்பு கருமை நிறமும் ஏற்படும் 

நெல்லிக்கனியில் வைட்டமின்சிஅதிக அளவில் உள்ளது. நெல்லிக்கனியிலுள்ள வைட்டமின்சிசத்து 100 கிராம் சதையில் 720 மில்லி கிராம் வரை சில கனிகளில் இருக்கும். கடலில் பயணம் செய்வோரும் நெல்லிக்கனிப் பொடியை உணவுடன் கலந்து உண்டால் கடல் நோய் (sea - sictness) வராது.

நெல்லிக்கனியில் நிறைய பெக்டினும் உள்ளது. நெல்லிக்கனியுடன் கடுக்காயையும் சேர்த்து தோல் பதனிட உபயோகிக்கின்றனர்.

நெல்லிக்காயிலிருந்து எழுதும் மையும் சாயப்பொருளும் தயாரிக்கலாம். காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய் தலை முடியை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது.

இதற்கு நறுமணமும், பூசன மற்றும் பாக்டீரியா நாசினியாகச் செயல்படும் திறனும் உள்ளன. நெல்லி விதையில் புரதத்தையும் கொழுப்பையும் சிதைக்கும் என்ஸைம்கள் உள்ளன.

மரத்துண்டுகளையும், கிளைகளையும் கலங்கிய நீரில் போட்டு வைத்திருந்தால் அதாவது கிணறுகளில் நீர் தெளிந்துவிடும். மற்றும் உப்பு நீரில் உப்பின் கடுமையைக் குறைத்துவிடும்.

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

நெல்லிமுள்ளி எனப்படும் உலர்ந்த காய் எல்லாக் காலங்களிலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின்சிசத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும்.

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது.

நெல்லியை வணிக ரீதியில் சாகுபடி செய்ய

ஒரு ஏக்கரில் 15 அடி இடைவெளியில் ஏறத்தாழ 200 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம். ... ஏக்கருக்கு 4 முதல் 6 தேனீ பெட்டி வைத்தால் மகரந்தச் சேர்க்கையின் மூலம் பூ பிடிப்பது அதிகமாக்கலாம். மரங்களை குட்டையாக வளர்க்க வேண்டும். 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.எஸ்.ஆர் 1 இரகமும், வட இந்திய இரகங்களான சாக்கியா, பனாரசி, என்..7, கிருஷ்ணா, காஞ்சன் போன்ற இரகங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்படுகின்றன. ஆயினும் பி.எஸ்.ஆர் 1 இரகமே தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்ததாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

நெல்லி எல்லாவகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள செம்மண் மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். ஆயினும், இதன் வளர்ச்சி 7 முதல் 8.5 வரையிலான கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும்.

ஒட்டுச் செடிகள் தான் நடவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.நெல்லிக்கன்றுகள் நட்ட முதலாம் ஆண்டு சுமாரான வளர்ச்சியே இருக்கும். இரண்டாமாண்டு முதல் வளர்ச்சி துரிதமாக காணப்படும்.ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் கிடைக்கும். ஜூன் மாத கடைசியில் பூ வந்தால், நவம்பர் மாதம் வரை அறுவடை செய்யலாம். ஜனவரியில் பூத்தால் ஏப்ரல் வரை காய்கள் கிடைக்கும். ஒவ்வொரு மகசூல் முடிந்ததும் கவாத்து செய்து, உரம் வைப்பது அவசியம். அப்படி செய்த பதினைந்தாவது நாள் பூக்க ஆரம்பிக்கும்.

நடவு செய்யப்பட்ட ஒட்டுக்கன்றுகள் 4வது வருடத்தில் இருந்து சுமார் 30 கிலோ முதல் 150 கிலோ நெல்லிக் கனிகள் மகசூலாகப் பெறலாம்.

 நன்றி  திரு அரவிந்தன்


படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Thursday, March 25, 2021

மூட்டு வலி காரணங்களும் தீர்வுகளும் |Joint pain causes and remedies



உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே மிகப்பெரிய பிரச்சனை என்பது மூட்டுவலி. இந்த மூட்டுவலி என்பது மூட்டுகளில் வருவது மட்டுமே என்று கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. எந்தெந்த இடங்களில் எல்லாம் எலும்பு வளையக்கூடிய தன்மை உள்ளதோ அந்த இடங்களில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் தான் வலி என்று சேர்ப்போம். உதாரணமாக சொன்னால் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி. இந்த மாதிரியான வலிகள் வருவதற்கான காரணங்கள் பலவகையாக இருக்கிறது. முப்பது வயதைத் தாண்டிய ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சாதாரணமாக வரக்கூடிய வலி என்ன என்றால் அதை மூட்டுவலி என்று சொல்லலாம்.

வயதான காலத்தில் ஒரு அறுபது வயதிற்கு பின்னால் உடலில் இருக்கக்கூடிய வளர்சிதை மாற்றங்கள் அடிப்படையில் மூட்டுவலி வந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு பார்த்தீர்களானால் இளையதலைமுறைகள் இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் உண்டாயிருக்கிறது என்றால் நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் மிகமுக்கியமான காரணம் என்று சொல்லவேண்டும். அந்த காலத்து உணவுப்பொருட்கள் இன்றைக்கு இல்லாததையும் காரணம் காட்டமுடியும். மேற்கத்திய மோகம் அடிப்படையில், மேற்கத்திய பாணியில் நம் கலையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாற்றிக்கொண்டதால் மேற்கத்திய மக்கள் சாப்பிடக்கூடிய உணவுவகைகளான துரித உணவுகள் (Fast foods) அதிகம் எடுக்கக்கூடியவர்கள் இன்று இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் இங்கு உண்டாகியிருக்கிறது.

முன்பெல்லாம் பார்த்தோம் என்றால் நிறைய சிறுதானியம் சார்ந்த உணவுகளை எடுப்போம். வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், ராகி இவையெல்லாம் பிரதான உணவுகளாக இருந்தபொழுது இந்த சிறுதானியங்களின் அடிப்படையில் நிறைய நார்ச்சத்து கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த மாதிரியான நார்ச்சத்து அதிகம் இருந்ததால் நம்முடைய எலும்புகள் நன்றாக வலுவாக இருந்தது, நரம்புகள் வலுவாக இருந்தது, இரத்தஓட்டமும் நன்றாக இருந்தது. நம்முடைய சதை ஒழுங்கான முறையில் இருந்தது, ஒரு பதினெட்டு வயதில் செதுக்கிவைத்த சிற்பம் மாதிரி இருந்த பெண்கள் நிறையபேர் இருந்தார்கள். ஒரு பெண் இந்த உடல் கூறுகளில்தான் இருப்பார்கள், என்று சொல்லி அன்றைய காலத்தில் அன்றைய உணவால் மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் இந்த துரித கலாச்சாரத்தால், நிறைய எடுக்கக்கூடிய உணவு கலாச்சாரத்தால், நாம் எடுக்கக்கூடிய உணவுகளில் புளிப்புகள் இருக்கிறதால், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த மூட்டுவலி அதிகமாக உண்டாகக்கூடிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதை முழுமையாக நீக்கவேண்டும் என்றால் உணவுசார்ந்த சில சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது கண்டிப்பாக சரிசெய்ய முடியும்.

உதாரணமாக எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகள் நிறைய எடுக்கக்கூடிய ஆணுக்கும் பெண்ணுக்கும் மூட்டுவலி வரக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டு. எனவே அதீத எண்ணெய் எடுக்கும்பொழுது மூட்டுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் inflammation அதாவது கிருமித்தொற்று வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் இந்த Infective condition அதிகமாக மூட்டுகளில் இருக்கும் பொழுது அதனாலே அந்த மூட்டில் தொற்று உண்டாகி அதன் அடிப்படையில் இந்த வலி வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு உண்டு அதே போல் ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடிய சூழல் இருக்கிறது. இம்மாதிரியான இருசக்கரவாகனங்கள் ஓட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் சரியான உணவு எடுக்காத நேரத்தில் தேய்வு, தேய்மானங்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் 50 கிலோமீட்டரிலிருந்து 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய ஆண்களுக்கு முதுகெலும்பு பிரச்சனை சாதாரணமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. L4,L5 என்று சொல்லக்கூடிய எலும்புகள் முழுமையாக தேய்ந்துபோய் அல்லது L4,L5 கால்சியம் Decalcificationஆவது. இதனால் கூட அந்த எலும்புவலியால் அவதிப்படக்கூடிய ஆண்கள் நிறையபேர் உண்டு. அதே போல் பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்ந்து போவது, கழுத்து எலும்பு தேய்ந்துபோவது, மூட்டுஎலும்பு தேய்ந்து போவது என்று சொல்லி, இருபது வயதிற்கு பிறகிலிருந்தே வலிகள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால் அதற்கான உணவுகளைத்தான் நாம் காரணமாக சொல்லமுடியும்.

மூட்டுவலியெல்லாம் அந்தக்காலத்தில் இல்லாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு வீடுகளிலும் உளுத்தங்களி வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தொடர்ந்து சாப்பிடக்கூடிய சூழல் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலேயுமே இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை நல்லெண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கி அதோடு மாவையும் சேர்த்து நன்றாக கூழ் மாதிரி கரைத்து வைத்துக்கொண்டு, நன்றாக தண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சிறிது சேர்த்து களியாகக் கிண்டி அதை காரக்களியாகவோ அல்லது இனிப்பு களியாகவோ தொடர்ந்து சாப்பிடுவார்கள். உளுந்தின் தன்மை என்னவென்றால் உடம்பில் இருக்கக்கூடிய 206 எலும்புகளையும் நன்றாக வலுவாக்கக்கூடிய தன்மை உளுந்துக்கு உண்டு. இந்த உளுந்தை சித்த மருந்துகளில், ஆயுர்வேத மருந்துகளில் மருந்துப்பொருளாகவே பயன்படுத்துவது உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சித்தமருந்துகளில் உளுந்து தைலம் உண்டு. இந்த உளுந்து தைலம் நாட்டுமருந்து கடைகளில், சித்தமருந்துகடைகளில் கிடைக்கும். இந்த உளுந்து தைலத்தை பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கை-கால் அசதி, சோர்வு இருக்கும்பொழுது எலும்புகள் தளர்ந்து போகும் பொழுது, எலும்புகளில் வலி இருக்கும்பொழுது அந்தத் தைலம் தேய்த்து பிடித்துவிட்டால் உடனே வலியை நீக்கக்கூடிய தன்மை உண்டு. ஆக உளுந்து தைலம் பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். உளுந்து தைலத்தை மிதமாக சூடுசெய்து வலி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து பிடித்து விடும்பொழுது கை-கால் வலி, அசதி, சோர்வு எல்லாமே சரியாகிவிடும்.

இன்றும் கிராமங்களில் பார்த்தோம் என்றால் உளுந்தை எலும்பு முறிவாக பயன்படுத்துவார்கள். சிலநேரங்களில் அடிபட்டோ, கிணற்று வேலைக்குப்போகும் பொழுதோ முதுகெலும்பு உடைந்துவிடுவது, மூட்டுகளில் வலி உண்டாவது, தவறி கீழே விழுந்துவிடுவது, சைக்கிள் மற்றும் பிரயாணத்தில் அடிப்பட்டுவிடுவது இந்த மாதிரி நேரங்களில் எலும்பு உடைந்துவிடும். அந்தமாதிரி உள்ளவர்களுக்கு இந்த உளுத்தங்களியை தினசரி உணவாக கொடுத்துக்கொண்டு, அதே உளுந்தோடு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளக்கருவை சேர்த்து குழைத்து பருத்தி துணியில் நன்றாக தடவி அதை கட்டு மாதிரி கட்டி 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். அந்த கட்டின இடத்தில் உளுந்து தைலத்தை விடாமல் தொடர்ந்து ஊற்றுவது, இந்த மாதிரி செய்யும் பொழுது உடைந்த எலும்புகள் கூட ஒன்றுசேரக்கூடிய தன்மை இந்த உளுந்துக்கு உண்டு. ஆகவே இந்த மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், வேதனையில் உள்ளவர்கள் கண்டிப்பாக எந்த அளவிற்கு இந்த உளுந்தை சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல அபாரமான பலனைப் பெறமுடியும்.

மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தோமென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவைத்தான் நாம் சொல்லவேண்டும். புளிப்பான உணவுகளை எந்த அளவிற்கு முடியுமோ குறைத்துவிடுங்கள். எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகளை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். அதே போல் வாயுவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் இருக்கிறது. அதில் உதாரணமாக பார்த்தோம் என்றால் வாழைக்காய். மூட்டுவலி இருப்பவர்கள் வாழைக்காயை உட்கொண்டால் வாய்வு அதிகமாகி மூட்டுவலி இன்னும் அதிகமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எனவே வாழைக்காயை முழுமையாக நீக்கிவிடுங்கள். அதே போல் அகத்திக்கீரை, பாகற்காய் இவைகள் உடலிலே சில முரண்பாடுகளைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள். மூட்டுவலி இருக்கும்பொழுது பித்தவாயு அதிகமாக இருக்கும். பித்தத்தைக் குறைக்கக்கூடிய உணவுகளைத்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். அதேபோல் இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும்.

மூட்டுவலி இருக்கிறது என்றால் பித்தத்தை குறைப்பதற்கு நெல்லிக்காய்க்கு நல்ல பலன் உண்டு. அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து தினசரி 4 நெல்லிக்காயை ஒன்றிரண்டாக நறுக்கி கூடவே சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதை காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். ஏனென்றால் இந்த நெல்லிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லுவோம். எல்லோராலும் ஆப்பிள் சாப்பிடமுடியாது. ஆனால் ஒரு ஆப்பிள் கொடுக்கக்கூடிய பலனை 4 நெல்லிக்காய் கண்டிப்பாகக் கொடுக்கும். எனவே அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும். இன்னும் ஒருசிலருக்கு பித்தஅடிப்படையிலேயே மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் லேகியத்தை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்ல ஒரு அற்புதமான பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு உடலில் ஆற்றல் பற்றாக்குறையினால் மூட்டுவலி வரலாம். அந்த மாதிரி உடல் பலகீனம் அடிப்படையில் மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய அமுக்கரா லேகியம், அஸ்வகந்தா லேகியம் இவைகளை நீங்கள் வாங்கி சாப்பிடலாம். இன்னும் சித்த மருந்துகளில் கிடைக்கும் மகாவல்லாதி லேகியத்தைக்கூட தொடர்ந்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட வலியாக இருந்தாலும் சரியாகும். ஆக மூட்டுவலிக்கு மேற்கொள்ளக்கூடிய ஆங்கில மருந்துகள் வேறு சில வலிகளைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. எந்த அளவிற்கு நீங்கள் மருந்துகளிலிருந்து விலகி இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களது உடல் ஆரோக்கியம் கூடவே இருக்கக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எதற்கெடுத்தாலும் வலிநீக்கி மருந்துகள் அதாவது pain killers தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவைக்கூட உண்டாக்கலாம். மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தமான சில சிக்கல்களை உண்டாக்கலாம். ஏனென்றால் ஆங்கில மருந்துகளில் steroid கலப்புகள் அதிகமாக இருக்கும். ஒரு மருந்து உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த மருந்தில் நிறைய பக்கவிளைவு இருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆனால் ஒரு உணவுப்பொருள் உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த உன்னதமான உணவு தான் உன்னதமான மருந்தும் கூட என்பதை கண்டிப்பாக உணரவேண்டும்.

கடைகளில் கிடைக்கக்கூடியது பிண்டத்தைலம். இந்தத் தைலம் சித்தமருந்துகடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான தைலம். இந்தத் தைலத்தை சூடுசெய்து கை,கால்வலி, உடம்புவலி, மூட்டுவலி, மூட்டு விலகியிருப்பது, பிசங்கியிருப்பது, பித்தவெடிப்பு எதுவாக இருந்தாலும் பிண்டத்தைலத்தை சூடு செய்து தேய்க்கலாம். அது ஒரு அற்புதமான தைலம். ஆக தைலம் முறையின் அடிப்படையில் ஒரு வலிநிவாரணத்தை தேடும்பொழுது கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

 கூடுதலாக உணவுபொருட்களில் நான் சொன்னமாதிரி வெந்தயக்களி சாப்பிடலாம், உளுத்தங்களி சாப்பிடலாம் இல்லையென்றால் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி சாப்பிடலாம். இதில் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி கை-கால் வலி, உடம்புவலி, மூட்டுசார்ந்த அத்தனை பிரச்சனைகளையும் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான கஞ்சி. இதில் பஞ்சமுட்டி என்னவென்றால் பச்சரிசி, சிறுபருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சமுட்டி என்று சொல்லுவோம். சித்தர்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்ற நூலில் இந்த பஞ்சமுட்டியைப் பற்றி சொல்லியிருப்பார்கள். இந்த பஞ்சமுட்டியையும், மூங்கிலரிசி என்பது மூங்கில் மரத்தில் விளையக்கூடிய ஒரு வகையான அரிசி, இந்த அரிசியையும் சேர்த்து எல்லாமே சமஅளவு சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளலாம். இதில் ஒரு கையளவு எடுத்து 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இந்த கஞ்சியை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுவும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது


கட்டுரை சித்த மருத்துவர்  அருண் சின்னையா


படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...