Thursday, April 29, 2021

தேன் பழ மரம் | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Singapore cherry


         


           Muntingia 

குடை போன்ற தோற்றத்துடன் இலேசான தொங்கு கிளைகளை கொண்ட இம்மரம் தமிழகம் முழுக்க சாலைகள் ஏரிகரைகள் மற்றும் காலியிடங்களில் காண முடியும்.இதன் சிறிய பழங்களை நசுக்கினால் நெய் போன்ற பழக்கூழ் வெளியாவதால் இதனை நெய் பழம் எனவும் அழைக்கப்படுகிறது.


இதனை சிங்கப்பூர் செர்ரி, ஜமாய்கன் செர்ரி,பனாமா பெர்ரி, பெஜ்லி மரம் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி மரம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இதன் தாயகம் தென் மெக்சிக்கோவாகும். கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.

இது 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம்.

வறட்சியையும் பல்வேறு மண் வகைகளிலும் வளரக்கூடியது.நடவு செய்த 18 மாதங்களில் விரைவாக வளர்ந்து மரமாகி பூத்து பழங்களை அளிக்க வல்லது.

விரைவாக வறண்ட நிலங்களில் பசுங்காடுகளை உருவாக்க நினைப்பவர்களும், குறுகிய காலங்களில் நிழல்தரும் மரங்களைகட்டிடங்களின் அருகில் வளர்க்க நினைப்பவர்களும் இம்மரங்களை தேர்வு செய்யலாம்.


இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது. 

இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய மஞ்சள் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்.

சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் சாப்பிட, வௌவால் மற்றும் விதவிதமான பறவைகள் தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம் மாதிரியான அரிய வகை செடிகள் தோட்டத்துல வளரும்.தங்கள் பகுதிகளில்  நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க நினைப்பவர்கள் பறவைகள் அதிகம் கவரவும்,அவைகள் வசிக்க இருப்பிடத்தை உருவாக்கவும் இம்மரங்களை நடவு செய்யலாம்.

சிங்கப்பூர் செர்ரி மரங்களை, பழத்தோட்டத்தில் நடவுசெய்வதன் மூலம் பறவைகள் மட்டுமல்ல,அணில், குரங்கு,வௌவால்கள் முதலியவை இந்தப் பழங்களைதான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு

அதிக சேதம் வராது. வௌவால்களால் அதிகம் சேதம் ஏற்படும் பழ வகை தோட்டங்களின் எல்லைகளில் இம்மரங்களை விவசாயிகள் நடவுசெய்வதன் மூலம் பழங்களுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும்.

மரம் விறகாகவும் கிராமப்புறத்தில் சிறிய கட்டட வேலை செய்யவும் பயன்படுகிறது! நார்சத்து உள்ளதால் தண்டு கயிர் திரிக்க பயன்படுகிறது. 


மரங்களை அலங்காரத்திற்கு வளர்க்கலாம். பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்களை ஜாம் செய்தும் சாப்பிடலாம். இலைகளை கொண்டு தேனீர் தயாரித்து குடிக்கலாம். இது தலைவலிக்கும் குடற்புண்ணிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது பழங்கள் மூச்சு கோளாறுகளை சரிசெய்யும் . 

இந்த மரம் அறுபது வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது . 

விதைகள் மற்றும் தண்டுகள் மூலமாக இதை பெருக்கம் செய்யலாம். வேகமாக வளரும் இயல்பு மற்றும் வறண்ட நிலங்களிலும் வளரும் தன்மை உடையதால் உயரம் குறைவான மலைச்சரிவுகள் மற்றும் தரிசு நிலங்களில் புதிய காடுகளை உருவாக்க இம்மரங்களை நடவு செய்யலாம். நகர்புறங்களில் அமைக்கப்படும் 

சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு இவை ஏற்றதொரு மரமாகும்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath...

Wednesday, April 28, 2021

மரமல்லி அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Tree jasmine | பன்னீர் மரம்


          

       Millingtonia hortensis

மௌவல் எனச் சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி பன்னீர் மரம் எனவும் அழைக்கின்றனர். குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.


பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.அதனால்  இந்த மரத்திற்கு இந்திய கார்க் மரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இதற்கான தாவரவியல் பெயரான மில்லிங்டோனியா ஹார்டென்சிஸ் என்ற பெயரில் உள்ள, மில்லிங்டோனியா என்ற சொல்லானது சர் தாமஸ் மில்லிங்டனின் நினைவாக இடப்பட்டது. இவர் இந்த இனத்தை முதலில் விவரித்த கார்ல் லின்னேயஸ் தி யங்கருக்கு உதவியாக இருந்தவர் எனப்படுகிறது. இதில் உள்ள 'ஹார்டென்சியா' என்ற சொல்லானது 'ஹார்டென்சிஸ்' மற்றும் 'ஹார்டஸ்' என்பதிலிருந்து உருவானது, இது லத்தீன் மொழியில் தோட்டத்துடன் தொடர்புடைய சொல்லாகும். 

இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பூ வருடத்திற்கு இரு முறை பூக்கும். மலர்கள் மிகுந்த வாசனையை கொண்டது. இப்பூவைக் கொண்டு மாலைகளும், மலர் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.இந்த மலர் இரவில் பூக்கும். மணம் மிக்கது.

இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும். பல மண் வகைகளில் வளரக்கூடியவை.சற்று ஈரப்பதமான காலநிலயை விரும்பக்கூடியவை.

இதன் உயர்ந்த தண்டுப்பகுதியில் பக்க கிளைகளும் மேல் நோக்கி இருப்பதால் இதன் தலைப்பு பகுதி பிரமிட் அல்லது தூண் வடிவில் அமைந்திருக்கும்.இதன் மரமானது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகவும்,மிருதுவாக எளிதில் உடையும் தன்மை கொண்டது.அதனால் பலமான காற்றுக்கு கிளைகள் உடைந்துவிடும்.

பொதுவாக, மரமல்லி மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், மரமல்லி மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.இந்த மரம் ஒரு அலங்கார மரமாக கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள பூக்களின் இனிய மணத்தால் தோட்ட மரமாக வளர்க்கப்படுகிறது

தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, மரமல்லி மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

மரமல்லி மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் மரமல்லி மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.இதன் இலைகள் மலிவான புகையிலைக்கு ஒரு மாற்றுபொருளாக சிகரெட்டில்  சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது,

காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.

பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.

கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

இம்மரங்கள் விதைகள்,தண்டு துண்டுகள்,  வேர்குச்சிகள் மற்றும் பக்கக் கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....



Saturday, April 24, 2021

அச்சி நறுவலி மரம் | ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Geiger tree

 Cordea sebestena

அச்சி நறுவலி மரம் மூக்குசளி மர குடும்பத்தை சார்ந்தது. இதனை Scarlet cardea எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

நடுத்தர உயரத்தை உடைய குறுமரமாக இருப்பதால் வீடுகளிலும்,வீட்டின் முன்புறமும் இதனை வளர்க்கலாம்.

கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் கண்டை கவரும் இளம் சிவப்பு வண்ணத்தில் கொத்து கொத்தாக பூக்கும் தன்மை கொண்டவை.

இவை வெப்பமண்டல அமெரிக்காவை தாயகமாக கொண்டவை.இயற்கையாகவே தெற்கு புளோரிடா,பஹாமா மற்றும் மத்திய அமரிக்காவில் வளர்கின்றன.

வறட்சியையும்,வெப்பத்தையும் தாங்கி வளரும் தன்மை கொண்டதால் இந்தியாவில் பரவலாக மலரழகு மரமாக பூங்காக்களில் வளர்க்க அறிமுகப்படுத்தப்பட்டு இன்று பல்வேறு நகரங்களிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.தென்னிந்தியாவில் பெங்களுரு,

சென்னை மற்றும் ஆந்திர,கேரள நகர தெருக்கள்,தோட்டங்கள்மற்றும் பூங்காக்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் இவை இலைகளை உதிர்காமல் மார்ச் முதல் பூத்து குலுங்கும் இயல்புடையவை.

உப்புக்காற்றை தாங்கி வளர்வதால் கடற்கரை பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரமாகும்.மேலும் பூச்சி தாக்குதலும் குறைவு.இருப்பினும் அதிக பனியை தாங்கி வளராது. வடிகால் வசதிக்கொண்ட

பலதரப்பட்ட மண்ணிலும் வளரும் தன்மை கொண்டதால் தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் எளிதாக வளர்க்க இயலும்.

இம்மரங்கள் விதைகள்.தண்டு குச்சிகள் மற்றும் விண் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் தன்மை கொண்டதால் இரண்டு முதல் மூன்றடி உயரமுடைய நாற்றுகளை நடவு செய்தால் வளர்ப்பது எளிதாக இருக்கும்.

இயற்கையாக வளரும் மரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிமர தண்டுகள் காணப்படும். முறையாக பக்ககிளைகளை அகற்றி ஒற்றை தண்டில் வளர்க்கப்படும் மரங்கள் அதிகப்படியாக  25 முதல் 30 அடி உயரமும்,25 செ.மீ குறுக்களவு கொண்டதாகவும் இருக்கும்.அதிகமான மிதமான தொங்கு கிளைகளை கொண்டு இதன் தலை பகுதி ஒரு மலர் குடுவை தோற்றத்தில் இருக்கும்.

இதன் இலைகள் அடர்த்தியாகவும், அகன்றும் 18 செமீ நீளம் கொண்டதாகவும்,தோல் போன்று தடித்தும்,

நுண்ணிய முடிகளை கொண்டதாகவும் இருக்கும்.எனவே இம்மரங்களை நிழலுக்காகவும் குறுகிய அகலம் கொண்ட தெருக்களிலும் நடவு செய்யலாம்.

நுனிதண்டுகளில் பூங்கொத்துக்கள் உருவாகும்.இதில் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என இரு வகைகள் உள்ளன.

இம் மரத்தண்டுகள் சற்றே கடினத்தன்மை கொண்டிருப்பதால் இதன் கிளைகள் காற்றில் அதிகம் முறிவதில்லை.இதன் மர தண்டுகள் உள்ளூர் மரவேலைகளுக்கு பயன்படுத்தலாம்.


இதன் இலைகளை உப்புத்தாள் போன்று உராய்வு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் இலைகள்,பழங்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன.

இதன் இலை கசாயம் குடல்,வயிறு மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகிறது.இதன் பழங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன.


காற்றில் நிலவும் தூசிகளை வடிகட்டி,பிராண வாயுவை நமக்களிப்பதுடன்,  பூவழகு மரமாக நில எழில் கலை வடிவமைப்பிலும் அதிகமாக பயன்படும் அச்சி நறுவலி  மரங்களை காலியிடங்களில் நடவு செய்து சுற்றுச்சூழல் காப்போம்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Friday, April 23, 2021

பாசடி மரம் அழகு மற்றும் நிழல் தரும் மரம் | African tulip

 Spathodea companulata


உலகத்தின் மிக அழகான பூ மரங்களில் ஒன்றான பாசடி மரத்தை கோழிக்கொண்டை மரமென்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

இதன் பூக்கள் சேவலின் கொண்டை போன்ற தோற்றத்தில் இளம் சிவப்பு வண்ணத்தில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.இவை ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட அயல்நநாட்டிலிருந்து இந்தியாவில் பரவிய மரமாகும்.


இந்த மரம் முதன் முதலாக 1787 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கோல்ட் கோஸ்ட் 

என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று கோல்ட் கோஸ்ட் என்பதுதான் கானா.அங்கோலா,எத்தோப்பியா,கானா,கென்யா,உகண்டா,சூடான்,தான்சானியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

பின்னர் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ்,  கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, பீஜி, இந்தியா,ஜமைக்கா, பப்புவா நியூகினியா, போர்டோரிகோ,  ஸ்ரீலங்கா, சான்சிபார் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பரவியுள்ளது.

வெப்ப மண்டல வறண்ட காடுகளில், 25 மீட்டர் உயரம் வரை வளரும்.பெரிய மரமாக அடிமரம் பருத்து வளரும்.

அடர்த்தியான நிழல் தரும் மரவகையான பாசடி மரங்களின் மரப் பலகை மிருதுவாக இருக்கும்.மரத்தில் பொந்துகள் அதிகம் விழுவதால் பறவைகள் வசிக்க ஏதுவான மரமிது.

பக்க கிளைகள் அதிகம் பரந்து விரியாமல் மரத்தின் தலைப்பகுதி செங்குத்தான நீள் கோள வடிவில் இருக்கும்.

அதனால் இந்தியாவில் இவை சாலை ஓரங்கள்,சாலையின் மத்தியில் உள்ள Median strip ஆகியவற்றில் நடவு செய்யப்படுகிறது. பெங்களூரு,சென்னை போன்ற நகரங்களில் இவை அதிகம் காணப்படுகிறது. 


மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை தோட்டப்பகுதிகள் மற்றும் காடுகளில் ஆங்காங்கே காணப்படுகிறது.

நிழலுக்காகவும் இதன் பெரிய கவர்ச்சியூட்டும் மலர்களுக்காகவும் இம்மரங்கள் கல்வி மற்றும் தொழிற்சாலை வளாகங்கள்,மற்றும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன.

கடைசல் வேலைகள் செய்வதற்கு ஏற்ற மரம் இது. கடைசல் வேலைகள் செய்ய முடியும் என்றால் தரமான மரம் என்று அர்த்தம். மேற்கு ஆப்பிரிக்காவில் 

கடைசல் செய்து இந்த மரத்தில் ஏராளமான பொருட்களை தயாராகின்றன. ஐரோப்பா மற்றும்எத்தியோப்பியாவில் விறகு மற்றும் கரியாக பயனாகிறது. இந்த மரம் பிளைவுட் என்னும் ஒட்டு பலகைகள் தயாரிக்க உதவுகிறது. 



இதற்காகவே பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை தோட்டப் பயிராக வளர்க்கிறார்கள்.ஒரு பலவீனமான காற்றுகூட இதன் கிளைகளை பலமாக உடைத்து முறித்துவிடும். அந்த அளவுக்கு இதன் கிளைகள் மென்மையானவை. இதன் வேர்கள் அதிக ஆழத்திற்கு செல்லாது. மேல் மட்டத்து மண்கண்டத்திலேயே பரவியிருக்கும்.

இதன் வயது 50 முதல் 150 ஆண்டுகள் ஆகும்.ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இதன் விதைகளை சாப்பிடுகிறார்கள்.பல்வேறு விதமான நோய்களை கட்டுப்படுத்தவும் இதனை பயன்படுத்துகிறார்கள். மரத்தின் பட்டை, இலைகள்  இவற்றைப் பயன்படுத்தி மலேரியா, எய்ட்ஸ் நோய்,  சர்க்கரை நோய், கைகால் வீக்கம், சீதபேதி,  மலச்சிக்கல்,  வாயுத்தொல்லைகள, குடல் புண்கள்,  தோல் சம்பந்தமான நோய்கள்,காயங்கள்,  காய்ச்சல், சிறுநீரகக் கோளாறுகள், ஈரல் பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்துகிறார்கள். விஷ முறிவுக்கும், மலேரியா மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தவும்கூட இது பயனாகிறது.

இதன் இலைகள், பூக்கள், மற்றும் பட்டைகளில் இருந்து தயாரிக்கும் கசாயத்தை பயன்படுத்தி வேர்க்குரு தோலில் ஏற்படும் வீக்கம் சிறுநீரக கோளாறுகள், காயங்கள், இரத்தத்தில் தேங்கும் சக்கரை, ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.

புதிய மரங்களை உருவாக்க இதன் விதைகள் மூலம் கன்றுகளை உருவாக்கி நடவு செய்யலாம்.

ஒரு கிலோ எடையுள்ள விதையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விதைகள் இருக்கும். பெரிய கிளைகளை வெட்டி நடலாம். வேர்ச்செடிகள் மூலமாகவும் புதிய மரங்களை உருவாக்கலாம். பொதுவாக வேர்ச்செடிகள் மூலமாக இயற்கையாகவே இம்மரங்கள்வேகமாகப் பரவும் குணம் கொண்டவையாகும்.

                        அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Thursday, April 22, 2021

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா? |EARTH DAY

 என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா?


(1) எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

(2) எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

(3) எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், ப்ளூட்டோ)

(4)  நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்

(5)  எனது துணைக்கோள் - சந்திரன்

(6)  எனது அண்டை வீட்டார் - வெள்ளியும், செவ்வாயும்

(7) எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ.

(8) என் பாதுகாவலன் – வியாழன் (என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும்)

(9) என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்.

(10) என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்

(11) நான் சுழலும் முறை - இடமிருந்து வலமாக (மேற்கிலிருந்து கிழக்காக)

(12) என்னை நானே சுற்றும் கால அளவு -23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்

(13)  நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்

(14)  சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்

(15) நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்

(16) எனது விட்டம் - நிலநடுக் கோட்டின் வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டர், ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.

(17) என்னுடைய எடை - 5,980,000,000,000,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

(18) என்னுடைய மொத்தப் பரப்பளவு - 510,072,000 கிலோ மீட்டர் அதில் நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர் (70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)

(19) என்னுடைய மேற்பரப்பு வெப்பம் - அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 ° செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.

(20) என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்

(21) என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்

(22) என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்

(23)  என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.

(24) நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக

(25) என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்

(26) எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்) பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ

(27) எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ

(28)  எனக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது - அமாவாசை

(29) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி

(30) சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)

(31) சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.

(32) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.

(33) என் மேல் இருக்கும் நிலப்பரப்பின் கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.

(34) என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் மொத்தம் 5 - பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். 

இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு கடல்களும் உள்ளது.

(35)  என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

(36) என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். 

கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். 

அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள்.

நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.

இயற்கை வளம் காப்போம் பூமியைப் பாதுகாப்போம்.

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM


Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Wednesday, April 21, 2021

தீக்கொன்றை | அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Flame tree/Gulmohar

 தீக்கொன்றை | அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Flame tree/Gulmohar

     


       Delonix regia

நிழலுக்காகவும்,வண்ண மலர்களுக்காகவும் அதிகமாக வளர்க்கப்படும் மரங்களில் தீக்கொன்றை முக்கிய இடத்தை வகிக்கின்றது.

மடகாஸ்கரை தாயகமாக கொண்ட இந்த மரம் 19ம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டது.உலகின் வண்ணமயமான மலர்களை அளிக்கும் மரங்களில் முதன்மையாக இம்மரங்கள் கருதப்படுகின்றன.

இந்தியாவில் பெரும்பாலும் சமீப காலங்களாக இம்மரங்கள் அதிக அளவில் சாலை ஓரங்களிலும்,பூங்காக்கள் மற்றும் கல்வி வளாகங்களிலும் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் வேகமாக வளரும் தன்மை, மேலோட்டமான ஆழமில்லா வேர் வளர்ச்சி,வண்ணமயமான மலர்கள் மற்றும் பரந்து விரிந்த கிளைகளுடன் கூடிய குடை போன்ற தோற்றம் ஆகியவற்றின் காரணமாக நில எழில் கலையிலும் (Landscape gardening), மண்அரிமானத்தை தடுக்கவும்      இம்மரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மே மலர்கள் என அழைக்கப்படும் இம்மரங்கள் மே முதல் ஜூலை வரையிலான காலங்களில் இலைகளை உதிர்த்து மரம் முழுவதும் இளஞ்சிவப்பு வண்ண மலர்களுடன் கோடைகாலங்களில் சாலை ஓரங்களில் காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்தாக அமையும்.

இவை சுமார் 30-40 அடி உயரமும், இதன் உயரத்தை விட பக்கவாட்டில் நீண்ட கிளைகளையும்,பெரணி போன்ற அழகான கூட்டிலைகளையும் கொண்டவை.இதன் காய்கள் 1-1.5அடி நீளமாக ஆரம்பத்தில் பச்சை வண்ணமாகவும் முற்றியபின்,பழுப்பு நிறமாகவும் இருக்கும்.இவை முற்றிய பின்னரும் மரத்திலேயே தொங்கி கொண்டிருக்கும்.

இம்மரங்களை சாலைகள்,பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களின் ஓரங்களில் பெருங்கொன்றை மரங்களுடன் கலந்து மாற்றி மாற்றி 30அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.இவ்விரண்டு மரங்களுமே ஒரே காலத்தில் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் (Contrast colour) பூத்திருக்கும் போது தொலைதூரத்திலிருந்து பார்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

இம்மரங்களை வீட்டின் முன் சுற்றுச்சுவரை மிக ஒட்டி நட கூடாது.ஏனெனில் இவற்றின் மேலோட்டமாக பரவி வளரும் வேர்கள் சுவர்களில் விரிசலை உண்டு செய்யலாம்.குறைந்த பட்சம் 5 அடி சுவரிலிருந்து தள்ளி நடுவது அவசியம்.

இதன் கிளைகள் வலுவற்றவை.வேர்களும் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக மண்ணில் பரவி இருப்பதால் காற்று காலங்களில் கிளைகள் முறியவும்,வேருடன் சாயவும்  அதிக வாய்ப்புகள்  உள்ளன.ஆகையால் மழை மற்றும் காற்று காலங்களில் நீண்ட மற்றும் தொங்கும் கிளைகளை கவாத்து செய்வதன் மூலம் குடை போன்ற அமைப்பு பராமரிக்கப்படுவதுடன் மழை  சேதங்கள் தவிர்க்கப்படும்.

இம்மரங்கள் கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரையிலும் 14°C முதல் 40°C வரை வெப்பநிலையை தாங்கி வளரக்கூடியவை.

களிமண்,மணல் போன்ற பலதரப்பட்ட மண் வகைகளில் 4.5 முதல் 7.5 வரை காரஅமில தன்மையை தாங்கி வளரும்.

மழை குறைவான பகுதிகளில் இவை வளர்ந்தாலும், ஓரளவு ஈரப்பதமான இடங்களில் நான்கு முதல் ஐந்து வருடங்களில் நன்கு வளர்ந்து பூக்க ஆரம்பிக்கும்.

SRI SAI FORESTRY Gulmohar Delonix Regia Flame Or Flamboyant Tree Seeds for Home Garden Road Side Shadow Apartments Compound Pack of 300 Grms click here

இதன் இலைகள்,பூக்கள், விதைகள் மற்றும் மரப்பட்டைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் விதைகளை சில பகுதிகளில் உணவாகவும்,மரப்பட்டை கசாயம் வாந்தியை தூண்டவும் பயன் படுத்தப்படுகிறது.

இதன் இலைகள்,பூக்கள், விதைகள் மற்றும் பட்டைகளில் உள்ள மூலப்பொருட்கள் நோய் எதிர்ப்பு திறனை தூண்டவும்,நீரழிவு,இதய நோய்கள்,வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதுடன்,நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சனம் மற்றும் பாக்டீரியா தடுப்பானாகவும் பயன் படுத்தப்படுகின்றன.

இம்மரங்கள் விதைகள் மூலமாக நாற்றுகள் தயார் செய்யப்பட்டு, 3-5 அடி வளர்ந்தவுடன் நடவு செய்யப்படுகிறது.இதன் விதை உறை கடினமாக இருப்பதால் இவை மண்ணில் விதைத்தால் கூட 1-2 ஆண்டுகள் வரையிலும் கூட முளைக்காது.எனவே இதன் விதை உறக்கத்தை நீக்க விதைகளின் இருபுறத்தையும் லேசாக தரையில் தேய்த்து (scarification) பின் நீரில் 24 மணிநேரம் ஊறவைத்து விதைப்பு செய்யவேண்டும்.

 

நாற்றுகளை பொதுவாக பருவமழை காலத்திற்கு முன் நடவு செய்யவேண்டும்.10-15 அடி உயரம் வளரும் வரை பக்க கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

Kraft Seeds 20KG Vermicompost for All Kinds of Plants Complete Food for The Soil, Enriched with Cow Urine, Organic | Vermicompost for Agriculture Organic Farming Greenhouse | Fertiliser for All Plants https://amzn.to/3OrrXgt

உங்கள் தெருக்கள்,பள்ளிகள், ஏரிக்கரைகளில் மற்ற மரங்களுடன் கலந்து இம்மரங்களை நடவு செய்யலாம்.

 அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM

Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

Tuesday, April 20, 2021

தூங்குமூஞ்சி மரம் ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Rain tree

தூங்குமூஞ்சி மரம் ஒரு அழகு மற்றும் நிழல் தரும் மரம் | Rain tree

Samanea saman



பண்ணி வாகை ,தூங்கு வாகை மற்றும் காட்டு வாகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தூங்குமூஞ்சி மரம் வாகை இனத்தை சேர்ந்த தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட நிழல் தரும் மரமாகும். 

தூங்கு மூஞ்சி மரத்தினை சோம்பேரிகளுக்கு உதாரணப்படுத்தி பேசுவது வழக்கம். மாலை நேரமானவுடன் இதன் இலைகள் மடிந்து மூடிக்கொள்வதால் பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்கிறது. 


பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும்.மேலும் தூங்கு மூஞ்சி மரமானது


மாலை நேரம், மேகமூட்டம் மற்றும் மழை நாளில் அதன் இலைகளை மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். 

இதனாலேயே இதற்கு மழை மரம் (Rain tree)என்றும் பெயர். 

தூங்கு வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது.

இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவுடனும் வளரக்கூடியது.இதன் தலைப்பு பகுதி நீள்கோள வடிவத்தில் குடைபோன்று தோற்றமளிக்கும்.

மரத்தின் மென் பகுதி வெண்மை நிறமாகவும், வைரப் பகுதி கருமை நிறமாகவும் இருக்கும்.

அடி மரம் குட்டையாகவும், மேல் குடை போல் பரந்தும் இருக்கும்.

பனிக்காலத்தில் இம்மரங்கள் இலைகளை உதிர்த்து விடும்.பின் புதியதளிர்கள் தோன்றுவதுடன் வெளிர் சிவப்பு வண்ணத்தில் பூக்கள் மரம் முழுக்க காணப்படும். வசந்த காலத்தில் தூங்கு வாகை மரத்தை கடந்து சென்றீர்கள் என்றால், மரத்தின் அடிப்பகுதி முழுவதும் தூவிகளும், காய்ந்த தூவிகள் சடை போலவும் திரண்டு கிடக்கும். முதலில் கொஞ்ச நாளைக்கு பூக்களாகவும், பிறகு அவை காய்ந்து சடைசடையாகவும் கிடக்கும்.

நமது பாரம்பரிய மரங்களுள் ஒன்றான வாகையை போன்று இலைகளும் பூக்களும் காணப்பட்டாலும் இவை ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்து இந்தியாவில் பரவிய ஒரு வெளிநாட்டு மரமாகும்.

இதன் கனியும், இலையும் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக பயன்பட்டு, பால் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. பிண்ணாக்கிற்கு சமமான சத்து  இதன் மரத்தின் காய்களிலிருந்து கிடைக்கிறது.  இலைகளை தழை உரமாகவும் பயன்படுத்தலாம். இதன் கனியில் புரோட்டின் 12 சதவீதம், கொழும்பு 2 சதவீதம், கார்போஹைட்ரேட் 55g சதவீதம் உள்ளது.

இலைகளிலும், காய்களிலும் நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் அடங்கியுள்ளன. இதன் இலைகளை உலர்த்தினால் 4 சதவீத அளவில் நைட்ரஜன் கிடைக்கும்.  காய்களை இடித்துத் தூளாக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். இதன் மரப்பட்டையில் ஆல்கலாய்டுகள் உள்ளன. மேலும், காலிக் அமிலம், குளுகோஸ், சுக்ரோஸ், கொழுப்பு அமிலம் போன்றவைகளும் உள்ளன.

இதன் பட்டை அல்லது இலைகளைத் தூளாக்கி தேநீர் அல்லது சுடுத்தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல்,அதிக இரத்த அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, ஆகியவை கட்டுப்படும். 


விதைகளை மென்று வந்தீர்களேயானால் நாள் பட்ட தொண்டைப் புண் விரைவில் குணமாகும். இதன் இலைகளின் சாறு காசநோய்க்கு அருமருந்து. கொலம்பியா நாட்டில் இதன் பழத்தை மயக்க மருந்து தயாரிக்க பயன்படுத்தறாங்க. 

மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை  பசையாகவும் பயன்படுத்தலாம்.

குறைந்த கனமுடைய மரச்சாமான்கள் செய்ய இதன் மரக்கட்டை உபயோகமாகிறது.

விரைந்து வளர்ந்து நிழல் தரும் தன்மை,பல்வேறு வகையான மண்ணில் வளர்தல்,வறட்சியை தாங்கும் திறன்,அதிக அளவு பிராண வாயுவை இரவில் தரும் காரணமாக தமிழகத்தில் இம்மரங்கள் நிழல்தரும் மரங்களாக சாலை ஓரங்கள்,கல்வி மற்றும் தொழிற்சாலை வளாகங்கள் ஆகிய பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

                        அரவிந்தன்

இது போன்று மேலும் பல பயனுள்ள குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

படித்தை பகிர்கிறேன்

Our You tube channel    https://www.youtube.com/c/A2ZAMUTHAM

Our Facebook https://www.facebook.com/A2ZAMUTHAM

Reference: Books and other web source

If you have any suggestion kindly write comment section.

By Nathan B.com  PG Dip in Yoga and Holistic Heath.....

மஞ்சளின் நன்மைகள்

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு , ம...